Sunday 16 October 2011

முள்ளான வேதனைகள்


எப்படியும் பார்த்து விட வேண்டும், பெயரினைச் சேர்த்து விட வேண்டும் என்று மணிகணக்கில் காத்திருந்தார் ராமசாமி. அவர் ஓய்வு பெற்ற கணக்கு வாத்தியார்.

அன்று எல்லாம் இப்படியில்லை, அவர் கிராமத்தில் வருகிறார் என்றாலே ஊரே அவருக்கு வழி விட்டு வணங்கி செல்லும். அவர் கணக்கு மட்டும் சொல்லித் தரவில்லை, கணக்கு பாடம் மூலம் எளிமையாக வாழ்க்கை கணக்கினையும் விவரித்து எளிமையாய் கற்று தந்ததால் அவரை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லா மாணவர்களும் கணக்கில் 100 சதவீதம் இல்லாவிட்டாலும், யாரும் தோல்வி அடையாமல் இருந்தது அவருக்கு மிகப் பெரிய பெயர் பள்ளியிலே. அவர் வேலை பார்த்தது ஒரு எளிமையான கிராமத்து நடுநிலைப் பள்ளி. அவர் தன் வறுமை நிலையிலும் கஷ்டப்பட்டு படித்து இந்த பதவிக்கு வந்தவர் என்பதால் அவருக்கு ஒவ்வொரு மாணவனின் குடும்ப சூழ்நிலை தெரிந்து அதன்படி தன்னால் ஆன உதவி செய்தார்.

"யாருப்பா இங்க ராமசாமி, எத்தனை தரம் கூப்பிடறது" என்று ஒரு முறை கூப்பிட்டு, ஒன்பது முறை கூப்பிட்டவன் போல் அந்த பியூன் கத்தி தீர்த்தான், அவரும் தன் மலரும் நினைவிலிருந்து திரும்பி,

"நான் தான் சார், என் பெயர் தான் ராமசாமி" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அலுவலர் அறைக்குள் சென்றார். அந்த அலுவலர் வந்தவரை ஏறிட்டு கூட பார்க்காமல் "என்னய்யா வேணும், சும்மா என்னுடைய டைம் வேஸ்ட் பண்ணாம, சீக்கிரம் சொல்லுயா, வந்துட்டாங்க காலங் காத்தால" என்று சொல்லி விட்டு அவர் தன்னுடைய அலைபேசியில் ஏதோ நம்பர் தேடிக் கொண்டிருந்தார்.

"சார், நான் ரிடையர்ட் கணக்கு வாத்தியார், என் பெயர் ராமசாமி, என் பேரன் பெயர் ரேசன் கார்டுல சேர்க்கனும்" என்று சொல்லி முடிப்பதற்குள், அவரை சட்டை கூட படுத்தாமல், அவர் மனுவினை வாங்கி கொண்டே தன் அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார் அந்த அலுவலர். பாவம் ராமசாமி, நேரம் கிட்டதிட்ட அரை மணிநேரம் ஆகி விட்டது, வாங்கிய மனுவிற்கும் பதில் சொல்லவில்லை, அவர் இருப்பதா, போவதா என்று தவித்து போனார். பாவம் வயதாகி விட்டதால் அவரால் ரொம்ப நேரம் நிற்க முடியவில்லை.

"சார், நான் என்ன பண்ணனும் சார்?" என்று வாய் விட்டு கேட்டும் விட்டார். வந்ததே கோபம் அந்த அலுவலருக்கு, அவரை அப்போது ஏறெடுத்தும் கூட பார்க்காமல், "என்னய்யா இப்ப அவசரம், நான் தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்ல, என்னமோ ரொம்ப தான் பண்ற என்று சொல்லியபடி அவரை உற்று நோக்கினான். ஒரு சில விநாடிகளில் அந்த அலுவலர் பதட்டத்தில், "சார் நீங்களா, சார் எப்படி இருக்கீங்க?, என்ன மன்னிக்கனும் சார், ஏதோ அலுவல் டென்சன்ல இப்படி பேசிட்டேன்" என்று கெஞ்சாத குறையாக அவரிடம் வேண்டும் தகவல்களைப் பெற்றுக் கொண்டு, ஆவண செய்து தருவதாய் சொல்லி அனுப்பி வைத்தான் அவரின் முன்னால் மாணவன். அந்த நினைவுகளைச் சுமந்தபடி பேரூந்தில் ஏறினார் ராமசாமி.

No comments:

Post a Comment