Tuesday 18 October 2011

நாணயம்...

அதுவும் சரி தான், என்று எண்ணியபடியே வெளியில் வந்தார் சதாசிவம். எத்தனை முறை கேட்டும் சில்லறை தரமறுக்கிறார்கள் வங்கியில், கேட்டால் எதாவது காரணம் சொல்கிறார்கள். பேசாமல் எதாவது கோயில்களில் கேட்டு பார்க்கலாம் என்று தனக்குள் எண்ணியபடி வெளியே வந்து வேகமாக நடையைக் கட்டினார் சதாசிவம்.

இது தினசரி நடைமுறை தான், இருந்தும் இன்று மிகவும் அலைகழிக்கப்பட்டார் சதாசிவம் வங்கியில். அது அவரை மிகவும் பாதித்தது. ஒரு காலத்தில் இப்போது மாதிரியெல்லாம் இல்லை, சில்லறைப் புழக்கம் அதிகமாக இருந்தது. ஏன் இப்படி ஆயிற்று எண்ணிக் கொண்டே கோயிலினை அடைந்து விட்டார் சதாசிவம்.

நல்ல வேளை சாமி இருக்கிறார் என்றபடியே, "சாமி வணக்கம், நல்லா இருக்கீங்களா" என்று கேட்டார் சதாசிவம். அந்த சாமியும் சாமி அருகில் இருப்பதால் சாமி மாதிரியே சொன்னார், மௌனமாக "ம், ம்ம்" என்று. மௌனமான அவர் பதில் பல சிந்தனைகளைத் தூண்டியது சதாசிவத்திற்கு. எப்போதும் நல்லா பேசும் சாமி ஏன் இன்று இப்படியிருக்கிறார் என்று இருந்தவர்க்கு வந்த வேளை நியாபகம் வந்தது..

"சாமி, சில்லறை கிடைக்குமா?" என்று கேட்டார் சதாசிவம். சாமியும் அன்று வந்ததில் இருந்த சில்லறைகளை எண்ணி கொடுத்தார் ஒரு 100 ரூபாய் தேறியது, அவ்வளவு தான். என்ன செய்வது கோவில் ஊருக்கு நடுவில் இல்லை, ஊரின் எல்லையிலிருக்கிறது, எதாவது விசேஷம் என்றால் தான் சில்லறை கூடும் என்று சொல்லியபடியே சில்லறையினைத் தந்தார் அந்த (ஆ)சாமி.

சில்லறையினைப் பார்த்தார் சதாசிவம், எத்தனையோ முறை பார்த்த அந்த சில்லறை இன்று பல கதைகளைச் சொன்னது. ஒரே வடிவத்தில் 1 ரூபாய், 50 பைசா, 5 ரூபாய். அவசரத்தில் மாற்றிக் கொடுத்து விடுவோமோ என்ற காரணத்தால் நாணயங்கள் எல்லாம் அவர் அவர் வீட்டு உண்டியலில் சேமிப்பாகி போனது, அவசரத்தில் வெளியே வந்தது வியாபாரமாகிப் போனது. ஆம் 100 ரூபாய்க்கு பொடிச் சில்லறை கேட்டால் 95 ரூபாய்க்கு தான் சில்லறை கொடுக்கிறார்கள்...

நாணயங்கள் வடிவத்தில் நாணயங்கள் வியாபாரமாகிவிட்டன, என்ற நொந்த படியே "வரேன் சாமி" என்று வழி நடந்தார் சதாசிவம். நாணயம் சிரித்தது, நாணயங்களின் குலுங்கலில் அவர் பைவழியாக....


No comments:

Post a Comment